ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க பாமக முடிவு?
சேலம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து சென்னையில் நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கூடி முக்கிய முடிவை அறிவிக்கும். திமுக வேட்பாளரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதைக் கருத்தில் கொள்வோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது பேச்சிலிருந்து திமுக வேட்பாளரை பாமக ஆதரிக்கும் முடிவை எடுக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பா.ம.க, நிலைப்பாடு குறித்து சென்னையில் நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கூடி முக்கிய முடிவை அறிவிக்கும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியதைக் கருத்தில் கொள்வோம்.
அதிமுக.ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த துறையிலும் தமிழகம் முன்னேறவில்லை. அனைத்து துறையிலும் பின்தங்கி இருக்கிறது. ஊழலில் மட்டும் தான் முன்னேறி கொண்டிருக்கிறது. இதனால் எனது தலைமையில் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் தமிழக கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஊழல்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்த இருக்கிறோம்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஜெயலலிதாவை நேற்று திடீரென சந்தித்துள்ளார். ஜெயலலிதா பதவி இழந்து அவரது மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் சந்தித்துள்ளார். அருண் ஜெட்லி மத்திய அமைச்சரவையில் 3 வது இடத்தில் உள்ளார். அவர் தேடிவந்து சந்தித்து சென்று இருப்பதை சாதாரண விஷயமாக கருத முடியாது. இந்த சந்திப்பை அருண் ஜெட்லி தவிர்த்து இருக்க வேண்டும். இதில் உள்ள சந்தேகங்களை அருண் ஜெட்லித்தான் விளக்கி கூற வேண்டும்.
ஜல்லிக்கட்டு குறித்து மேனகா காந்தி கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் அபத்தமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழக மக்களின் உணர்வு. சேலம் மாவட்டம் கெங்கவல்லி தெடாவூரில் எருதுவிட்டதாக 48 பேர் மீது வழக்கு பதிவு செய்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் நடந்து வருகிறது. அங்கு யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இங்கு மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள்.
சேலம் மாநகராட்சியில் பெரும் ஊழல் தலை விரித்தாடுவதாக தெரிகிறது. நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மேம்பாலம் அமைக்கும் பணி, குடிநீர் வழங்குவது போன்ற பணிகள் முடங்கி கிடக்கிறது. சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஏதும் நடக்கவில்லை. இதனால் தமிழக அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெற்று திட்டப்பணிகள் நிறைவேற்ற வேண்டும். மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரணை நடத்தவும் முன் வரவேண்டும்.
சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. எனினும் இது போதுமானது அல்ல. அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரவள்ளி கிழங்கு 70 கிலோ கொண்ட மூட்டை ரூ.350, ரூ.400-க்கு தற்போது விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைதுள்ளனர். இதனால் குறைந்த பட்சம் ரூ.1000-ம் வழங்க விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதுபோல் பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அரசை கேட்டு கொள்கிறோம்.
வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இப்போது ஆந்திர அரசு இதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது. அந்த ஆணையம் அந்த மாநிலத்தின் விலை பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது. இதுபோன்ற தமிழகத்திலும் விலை நிர்ணயிக்க ஆணையத்தை அமைக்கவேண்டும். இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக விவசாய சங்க தலைவர்களை சேர்க்க வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.--












Click it and Unblock the Notifications