கொழுந்து விட்டு எரியும் தமிழக பிரச்சினைகள்... அரசியல் ஆசை கொண்ட ரஜினி சாதிப்பாரா?
தமிழ்நாட்டுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் இடையில் பற்றி எரியும் பிரச்சினைகள் பல்வேறு உள்ளன. அவற்றை எல்லாம் சமாளித்து ரஜினியால் அரசியலில் வெற்றி காணமுடியுமா ? என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
சென்னை: கவனமாக கையாளக் கூடிய தமிழகம் சார்ந்த பிரச்சினைகள், அதாவது வாழ்வாதார பிரச்சினைகளை ரஜினி சமாளித்து சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்த் திருமண மண்டபத்தில் கடந்த திங்கள்கிழமை நடிகர் ரஜினி, தன் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய கருத்தால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும்ம் ரஜினி தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

25 ஆண்டுகளுக்கு முன்பு...
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவை அவர் எதிர்த்த போது அவருக்கு பிரச்சினை வந்தது. அப்போது அவரை அரசியலுக்கு இழுக்க பொதுமக்களே விரும்பினர். எனினும் அவர் வரவில்லை. மாறாக ஊழல் கட்சிகள் என்று முத்திரை குத்தப்பட்ட திமுக- தமாக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது திடீரென அரசியலில் ஈடுபட போகிறார் ரஜினிகாந்த்.

கொழுந்து விட்டு எரியும்...
தற்போது தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும், உணர்ச்சிகரமான பிரச்சினைகள் ஏராளம்.. முதலில் காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் நீரை திறந்து விட மறுக்கிறது கர்நாடகம். கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும் போதும் அங்குள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவர். அந்தளவுக்கு பிரச்சினையாகும். அடுத்து இலங்கை தமிழர்கள் பிரச்சினை இதற்கும் எந்த அரசியல் கட்சிகளும் அறிக்கை, கண்டனம் விடுகின்றனரே தவிர பிரச்சினைக்கு புல்ஸ்டாப் வைக்க முடியவில்லை.

விவசாயிகள் பிரச்சினை
மூன்று மாநிலங்களுடன் இணைந்ததுதான் இந்த விவசாய பிரச்சினை. அதாவது காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால்தான் காவிரி டெல்டா விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். அதேபோல் ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தமிழகத்துக்கு தண்ணீர் செல்லாதவாறு பாலாறு, பவானியில் தடுப்பணைகள் கட்டுவதால் தண்ணீர் வருவதில்லை. இதுதான் தமிழகத்துக்கு பிரதான பிரச்சினை. இவை மட்டுமில்லாமல் மாநிலத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினை நிறைய இருக்கு.

ரஜினி சாதிப்பாரா?
சன் நியூஸ் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர், காவிரி பிரச்சினையை ரஜினி தீர்ப்பார் என்று அசால்ட்டாக சொல்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகளே காவிரி, கச்சதீவு, முல்லை பெரியாறு, விவசாய பிரச்சினை உள்ளிட்டவைக்கு மாறி மாறி குறை கூறி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து ரஜினியால் சிங்க நடை போட முடியுமா என்பதே கேள்வி. அரசியலுக்கு வந்தவுடன் இந்த பிரச்சினைகளை தீர்க்க என்ன வழிமுறைகளை கையாள போகிறார் என்பதை அவர் மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications