நரேந்திர மோடி பிரச்சார கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்பாரா?
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி தமிழகத்தில் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது பாமக. ஆனால் பாஜக கூட்டணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முழு மனதோடு ஏற்கவில்லை என்று கூறப்பட்டது. அவரது மகனும், இளைஞரணி செயலாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸின் வற்புறுத்தல் காரணமாகவே பாமக, பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.
எதிர்எதிர் துருவங்களாக இருந்த பாமகவும், தேமுதிகவும் நண்பர்கள் ஆனார்கள். இதைத் தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸும், தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷும் பரஸ்பரம் பொன்னாடை அணிவித்து சமாதானம் ஆனார்கள்.
இதனையடுத்து கீழே இறங்கி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி தர்மத்தை மதித்து பிரச்சாரம் செய்து வருகின்றார். ஆனால் இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டது முதலே உடல் நிலையைக் காரணம் காட்டி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஆனால் அவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்தார்.
இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்காக ராமதாஸ் பிரச்சாரம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ராமதாஸ் தைரியமாக உள்ளார்.
இந்த நிலையில் விரைவில் தமிழகம் வர உள்ள பாஜக பிரமதர் வேட்பாளர் மோடி கூட்டத்திலாவது டாக்டர் ராமதாஸ் பங்கு கொள்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் விடை தான் கிடைக்கவில்லை.