ஒரு வாரத்தில் பதவி விலகுகிறார் முதல்வர் ஓபிஎஸ் ? - ஜன. 18ல் சசிகலா பதவியேற்பு?!
ஜனவரி 18ஆம் தேதியன்று சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒபிஎஸ் இனி ஒரு வாரம் மட்டுமே முதல்வராக இருப்பார் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி... இது அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் சசிகலாவுக்குத்தான் தற்சமயம் பொருத்தமானதாக இருக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே நிறைந்த பவுர்ணமி நாளான ஜனவரி 12ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக்கொள்ள நாள் நட்சத்திரம் பார்த்து தயாராக இருந்தார். இதற்கு மத்திய அரசு பல தடைக்கற்கள் போட்டது.
மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதுபோல் உதய் திட்டம், நீட் திட்டம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்துப் போட வேண்டும் என்று உத்தரவு போட்டது.

கையெழுத்து
டெல்லி சென்ற மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் உதய் திட்டம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். மத்திய அரசுக்கு, அதிமுக ஆட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று இங்கிருந்து கிரீன் சிக்னல் போன பின்னரே சசிகலா முதல்வர் பதவியேற்க அங்கிருந்து சிக்னல் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது ஜோதிடர்கள் குழு
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் சசிகலா முதல்வராக பதவியேற்க தடை போடுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து அந்த ஜோதிடருக்கு கல்தா கொடுக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது 3 பேர் கொண்ட ஜோதிடர்கள் குழுவினர் சசிகலாவிற்கு நல்ல நேரம், நாட்கள் கணித்து தருவதாகவும் கூறப்படுகிறது.

ஜோதிடர்களிடம் ஆலோசனை
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரான சூட்கேஸ் ஜோதிடர் ஜமால் ஜனவரி 12, 18 ஆகிய இரண்டு தேதிகளை குறித்துக் கொடுத்தார். அதேபோல ஜோதிடர்கள் குழுவினரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதாம்.

ஜனவரி 19ல் பதவியேற்பு
2017 ஜனவரி 18ஆம் தேதி அதாவது துர்முகி வருடம், தை மாதம் 5ஆம் தேதி, புதன்கிழமை சரியாக இருக்கும் என ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள். சூட்கேஸ் ஜோதிடர் ஏற்கனவே ஜனவரி 18ஆம் தேதியும் குறித்து கொடுத்திருந்தார். எனவே 18ஆம் தேதி பதவியேற்புக்கு தயாராகிவிட்டாராம் சசிகலா.

பிரச்சினையில்லை
தற்போதைய முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தால் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பதால்தான் அவரிடம் முன்கூட்டியே ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார்களாம். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது. முதல்வர் பன்னீர்செல்வம், எந்த நேரத்தில் சொன்னாலும் பதவியிலிருந்து விலகத் தயாராகவே இருப்பதாகச் சொல்கிறார்கள்












Click it and Unblock the Notifications