கடலூர் தொகுதியில் சீமான் ஜெயிப்பாரா? என்ன சொல்கிறது விகடன் கணிப்பு?
கடலூர்: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போட்டியிலும் கடலூர் தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுவதாகவும், இதில் அதிமுக முந்துவதாகவும் விகடன் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
சீமானின் போட்டி காரணமாக கடலூர் தொகு நட்சத்திர தொகுதியாக மாறியது. தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே இந்தத் தொகுதியில் சுற்றிச் சுழன்று வேலை பார்த்தனர் நாம் தமிழர் கட்சியினர்.
குறிப்பாக பெருவெள்ளம் வந்து மக்கள் அவதிப்பட்டபோது முதல் உதவிக் கரம் நீட்டியவர்கள் அதிமுகவோ, திமுகவோ அல்ல.. நாம் தமிழர் கட்சியினர்தான். மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முயன்றனர். சீமானே நேரடியாக களமிறங்கி வெள்ள நிவாரண வேலைப் பார்த்தார்.

தேர்தல் அரசியலில் முதல் முறை களமிறங்கும் சீமான் போட்டியிட இந்தத் தொகுதிதான் சிறந்தது என அவரது கட்சியினர் முடிவெடுத்த பின்னணியும் இதுதான்.
இப்போது கடலூர் தொகுதியின் தற்போதைய ஆளும் கட்சி எம்எல்ஏ, அமைச்சர் எம்சி சம்பத், மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சீமான், திமுகவின் புகழேந்தி, த.மா.கா வேட்பாளர் சந்திரசேகர், பா.ம.க தாமரைக்கண்ணன் போட்டியிடுகின்றனர்.
ஐந்துமுனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில், விகடன் கணிப்புப்படி அதிமுக 33 சதவீத வாக்குகளும், திமுக 30 சதவீத வாக்குகளும், பாமக 13 சதவீத வாக்குகளும், தமாகா 11 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் 9 சதவீத வாக்குகளும் பெறுகின்றன.
எம்.சி.சம்பத் பெரிதும் நம்பியுள்ள மீனவர், வன்னியர் வாக்குகளை சீமானும், தாமைரைக்கண்ணனும் கணிசமாகப் பிரிப்பதாக விகடன் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் அதிமுக முந்துவதாக கணிப்பின் முடிவு கூறுகிறது.
"இந்தக் கணிப்புகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவே இல்லை. மக்கள் மீது மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. தமிழக சட்டப் பேரவையில் சீமானின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது கடலூர் மக்களின் விருப்பம். அது 19-ம் தேதி தெரிந்துவிடும். அதற்குள் எதற்கு இந்த அவசர கணிப்புகள்," என்கிறது நாம் தமிழர் கட்சி!












Click it and Unblock the Notifications