ஜெ. மரணம்.. விரைவில் பெரிய "குண்டை" வீச தயாராகிறது ஓ.பி.எஸ் அதிமுக?
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நேற்று பி.எச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும் பச்சையாகவே இது திட்டமிட்ட மரணம் என்று கூறி விட்டனர். மறைமுகமாக சசிகலா குடும்பத்தையும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனாலும் இதற்கு சசிகலா குடும்பத்திலிருந்து எந்த வலுவான பதிலும் வரவில்லை. விரைவில் பெரிய குண்டை எடுத்து ஓ.பி.எஸ் அணி வீசும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் வரையிலும் கூடவே இருந்தவர்தான் ஓ.பி.எஸ். சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்தபோதும் அவர் கூடவேதான் இருந்தார். முதல்வர் பதவியில் அமரப் போகிறார் சசிகலா என்ற செய்தி வந்த போதும் கூட கூடவேதான் இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் எதுவும் பேசாத ஓ.பி.எஸ். தற்போது அடுத்தடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி காட்டி வருகிறார்.
தொடர்ந்து ஓ.பி.எஸ் அணி பரபரப்புப் புகார்களைக் கூறி வந்தாலும் கூட சசிகலா தரப்பிலிருந்து யாருமே வாய் திறக்கவில்லை. யாராவது ஒரு அமைச்சரவை விட்டு மட்டுமே பதில் தந்து கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு.
தள்ளி விடப்பட்டாரா ஜெயலலிதா
இந்த நிலையில்தான் நேற்று பி.எச். பாண்டியன் பரபரப்பு புகார்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜெயலலிதாவை கீழே தள்ளி விடப்பட்டதால்தான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர் என்று அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கை கூறுவதாக பி.எச். பாண்டியன் கூறியுள்ளார்.
தள்ளி விட்டது யார்
அப்படியானால் ஜெயலலிதாவை தள்ளி விட்டது யார் என்ற கேள்வி எழுகிறது. போயஸ் தோட்டத்தில் அந்த சமயத்தில் உடன் இருந்தவர்கள் யார். ஏதாவது வாக்குவாதம் அல்லது சண்டை நடந்தது., அப்படி என்றால் எதற்காக அது ஏற்பட்டது போன்ற கேள்விகளும் எழுகின்றன. தள்ளி விடப்பட்டார் என்றால் படியில் உருட்டி விடப்பட்டாரா அல்லது மாடியிலிருந்து தள்ளி விட்டார்களா என்ற குழப்பங்களும் உள்ளன. ஆனால் விடைதான்
ஆம்புலன்ஸுக்குப் போன் போட்டது யார்
மேலும் போயஸ் தோட்டத்திலிருந்து ஆம்புலன்ஸ் கேட்டு அப்பல்லோவுக்கு போன் போனதாக பி.எச். பாண்டியன் கூறியுள்ளார். அதை செய்தது ஒரு டிஎஸ்பி என்றும் கூறுகிறார். யார் அந்த டிஎஸ்பி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக டிஜிபி விசாரித்தாரா என்று தெரியவில்லை. ஜெயலலிதா வீட்டில் பாதுகாப்புக்கு யார் யார் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் விசாரிக்கப்பட்டார்களா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இதை விசாரித்திருப்பார்களா என்பதும் கேள்விக்குறியே.
சிசிடிவி கேமராக்கள்
பிஎச்பாண்டியனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் சந்தேகமும் ஏன் சிசிடிவி கேமராக்களை அகற்றினார்கள் என்பதுதான். ஜெயலலிதா மருத்துவமனைக்கு எப்போது வந்தார், எந்த நிலையில் வந்தார், யார் கூட்டி வந்தது என்பது உள்ளிட்ட அடிப்படைக் கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்கக் கூடியது இந்த கேமராக்கள்தான். ஆனால் அந்தக் கேமராக்களை தூக்கியதுதான் பெரும் சந்தேகத்தைக் கிளப்புவதாக உள்ளது.
அடுத்து பெரிய குண்டு?
ஒவ்வொரு தகவலாக வெளியிட்டு வருகிறது ஓபிஎஸ் அணி. நேற்று பிஎச்பாண்டியன் பேசுகையில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக கூறினார். அப்படியானால் விரைவில் குற்றவாளி யார் என்பதையும் பிஎச் பாண்டியன் வெளியிடுவாரா என்ற பரபரப்பு கூடியுள்ளது.
ஆயிரக்கணக்கான கேள்விகள்
ஆயிரக்கணக்கான கேள்விகள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஜஸ்ட் லைக் தட் செத்துப் போயிருக்கிறார் என்பது நிச்சயம் ஜீரணிக்க முடியாதது. கண்டிப்பாக ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் விளக்கம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.. நீதிமன்றம் உத்தரவிடாவிட்டாலும் கூட!