11 மாடி கட்டிட விபத்தில் சிக்கியவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா?
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று 11 மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. 47 பேரை பலிகொண்ட இந்த விபத்தில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட கூலி தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏழ்மைநிலையில் தொழிலாளர்கள்
உயிர் இழந்த தொழிலாளர்களின் உறவினருக்கும், மீட்கப்பட்டவர்களுக்கும் எத்தகைய ஆறுதல் கூறினாலும் இழப்பை ஈடு செய்ய இயலாது. ஆனாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வறுமையினாலும், ஏழ்மையினாலும் மனைவி, குழந்தைகளை பிரிந்து இங்கு தங்கி வேலை செய்துள்ளனர்.

காப்பீடு தொகை கிடைக்குமா?
அரசு சார்பில் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கட்டிடத்தின் உரிமையாளர் அல்லது காண்ட்டிராக்டர் இன்சூரன்ஸ் செய்திருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று காப்பீடு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அடுக்குமாடி வீடுகள் கட்டும் போது கட்டிட உரிமையாளர் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக இன்சூரன்ஸ் செய்வார்கள். பணியின் போது ஏதாவது நேர்ந்தால் அவர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கட்டிட உரிமையாளர்
அது போல இந்த கட்டிடத்தின் உரிமையாளர் இன்சூரன்ஸ் செய்திருந்தால் இதில் உயிர் இழந்த, படுகாயம் அடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கும். ஆனால் அவர் இன்சூரன்ஸ் செய்தாரா? இல்லையா என்று தெரியவில்லை.

உரிமையாளருக்கு கிடைக்கும்
பொதுவாக பில்டர்கள், நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் கட்டிடம் பாதிக்க கூடும் பட்சத்தில் அவற்றில் இருந்து தப்பி கொள்வதற்காக இன்சூரன்ஸ் செய்வது வழக்கம். அப்படி அவர் இன்சூரன்ஸ் செய்திருந்தால் இடிந்து தரைமட்டமான கட்டிட உரிமையாளருக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வீட்டிற்கு இன்சூரன்ஸ்
புதிய வீடு வாங்குபவர்களும் அந்த வீட்டிற்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இயற்கை பேரிடர் போன்ற காரணத்தால் விபத்து ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடு தொகை கிடைக்கும்.

வீட்டுக்கடன் வசதியில் உண்டு
பொதுவாக கடன் வழங்கும் வங்கிகளே தற்போது இன்சூரன்ஸ் செய்கிறார்கள். இதனால் வீட்டு கடன் மூலம் வாங்குபவர்கள் இன்சூரன்ஸ் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

பலியானவர்களுக்கு ஆறுதல்
மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சிக்கியவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை எதுவும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? கட்டிட உரிமையாளர் இன்சூரன்ஸ் செய்திருந்தாரா? என்று விசாரித்தால் மட்டுமே இந்த உண்மை தெரிய வரும். பலியான குடும்பத்திற்கு இந்த தொகை ஆறுதல் தரும் மருந்தாக இருக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.












Click it and Unblock the Notifications