திருப்பரங்குன்றம் இடைத்தேர்ல் நடக்குமா? நடக்காதா? புதிய சிக்கல்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடக்குமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா என்று புதிய சிக்கல் எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் பணியில் அதிமுக, அமமுக கட்சிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
அதிலும் தினகரன் பொதுக்கூட்டங்களுக்கு செல்வது, உறுப்பினர்களை சேர்ப்பது, வாக்குச்சாவடிகளை பிரித்து முக்கியத்துவம் வழங்குவது, மக்களை வாக்காளர்களாக மாற்றும் முயற்சிகள் என அத்தனை வேலைகளிலும் இறங்கிவிட்டார். அதோடு தங்க தமிழ்ச்செல்வனும் திருப்பரங்குன்றத்திலேயே முகாமிட்டு இந்த பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
[ ஒரு மணி நேரத்தில் ரூ. 1 கோடி - அரசு இணையதளத்தில் வீட்டுக் கடனும் இனி கிடைக்கும் ]
செயல்வீரர்கள் கூட்டம்
அதேபோல, அதிமுகவினரும், நலத்திட்ட உதவி வழங்கல், ஆலோசனை கூட்டம், தேர்தல் பணிக்குழு அமைப்பு, ஆலோசனைக் கூட்டம், சைக்கிள் பேரணி ஒருபக்கம் ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் நாளையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி
இடைத்தேர்தலை ஒட்டியே மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதனை தொடர்ந்து தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்திலேயே நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஆர்வம்
இன்னும் சொல்லப்போனால் அதிமுக, அமமுக இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் திமுக மெத்தனத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரியின் அச்சுறுத்தல் என்ற காரணம் பொதுவாக சொல்லப்பட்டாலும், தற்போது அங்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்பதிலேயே திமுக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
ஜெ. கைரேகை வழக்கு
ஏனெனில், அதே தொகுதியில், மறைந்த ஏ.கே. போஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார். கடந்த 7-ம் தேதி அவர்அளித்த அந்த மனுவில், "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக மறைந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
விதி மீறிய அறிவிப்பு
இந்நிலையில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால், நிலுவையில் உள்ள அந்த வழக்கு தொடர்பாக அரசிதழ் மற்றும் செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்த பிறகே, தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும்.ஆனால் அந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்றாமலேயே, போஸ் எம்எல்ஏ மறைந்துவிட்டதால், அந்த தொகுதி காலியானதாக அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே இது பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 116-ன் மீறிய செயலாகும்" என்று கூறியுள்ளார்.
சரவணன் வேட்பாளர்?
இப்படி ஒரு புகார் மனு திமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. சரவணனின் இந்த புகார் மனுவினை ஆணையம் செயல்படுமானால் இடைத்தேர்தல் நிறுத்தவோ அல்லது தள்ளிபோடவோ வாய்ப்புள்ளது. ஒருவேளை புகார் மனுவை ஆணையம் நிராகரிக்கும்பட்சத்தில் சரவணனையே திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் திமுகவின் தலைமையின் எண்ணமும், சிந்தனையும், செயல்பாடும் இரண்டு இடைத்தேர்தல்களைவிட நாடாளுமன்ற தேர்தலை நோக்கியே பயணிக்க தொடங்கிவிட்டதுதான் உண்மை!!