அரசு பள்ளியின் அவலம்: பாடம் படிக்க ஏங்கும் மாணவ-மாணவிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவிகள் பாடம் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது வடக்கு முத்தையாபுரம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 20 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரண்டு ஆசிரியர்களும் உடன்படிக்கையின்படி ஒருவர் மாற்றி ஒருவர் என யாராவது ஒருவர் தான் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

பந்தல்குடி-புதூர் சாலையில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த பள்ளிக்கு தினமும் வரும் ஆசிரியையும் காலையில் தாமதமாக வருகிறார். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காலையில் அவர்களாகவே ஒன்று கூடி இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, செய்தி வாசிப்பு என காலை பிரேயரை முடித்து விட்டு ஆசிரியை வருகைக்காக காத்திருக்கின்றனர். காலையில் தாமதமாக வரும் ஆசிரியை மாலையில் அவசர கதியில் கிளம்பி விடுவது வாடிக்கையாக நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்களுக்கு நல்ல பழக்கத்தை கற்றுத் தர வேணடிய ஆசிரியர்களே தாமதமாக செல்வதும், ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பு எடுப்பதும் மாணவர்களின் படிப்பை பாதிக்கிறது. பள்ளிக்கு மட்டம் போடும் மாணவர்களை திருத்த வேண்டிய ஆசிரியர்களே இப்படி பள்ளிக்கு மட்டம் போட்டால் என்னவாகும் நிலைமை. இது குறித்து கல்வித் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications