காவிரி உரிமைக்காக வாழப்பாடியார் போல பதவியை தூக்கி எறிவாரா பொன்னார்?
காவிரியில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்காக தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா?
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் இருந்து செல்ல இருந்த குழுவை பார்க்க மத்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் இருந்து மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா?
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதோடு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்திலும் பதில் அளித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டது. ஆனால் தமிழக குழுவை பார்க்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக வேடிக்கை பார்க்கிறது
தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்ட தமிழக பாஜக தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதில் மத்திய அரசு அலட்சியப் போக்கை ஏன் இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பதவியை தூக்கி எறிந்த வாழப்பாடியார்
1991-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. 1992-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டது. மத்திய அரசின் துரோகத்தை சகித்துக் கொண்டு பதவிவெறியில் ஒட்டிக் கொண்டிருக்காமல் அமைச்சர் பதவியை தூக்கிப் போட்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

தைரியமாக எதிர்ப்பை காட்டியவர்
பதவி வேறு நம் மாநில உரிமை வேறு என்பதற்கு சான்றாக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. யார் எப்படி போனால் என்ன நமக்கு பதவி, மரியாதை கிடைத்தால் போதும் என்று ஒட்டிக்கொண்டிருக்காமல் தைரியமாக தன்னுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

பதவி விலகுவாரா பொன்னார்?
அத்தகைய செயலை தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் செய்வாரா? மக்கள் நலன் தான் முக்கியம் என்று மார்தட்டிக்கொள்ளும் பொன். ராதாகிருஷ்ணன், கர்நாடகா பாஜக எப்படி அவர்கள் மாநில மக்களுக்காக குரல் கொடுக்கிறதோ அதுபோல தமிழக பாஜகவும் தங்கள் மாநில மக்களின் அக்கறை கொண்டது என்பதை தனது பதவி விலகல் மூலம் உணர்த்துவாரா?












Click it and Unblock the Notifications