பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி பிளான் ரத்து? மத்திய அரசின் முடிவால் பின்வாங்குவாரா வேல்முருகன்?
சென்னை : நிலக்கரி சுரங்க அனுமதியைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு சென்னையில் கறுப்பு கொடி காட்டுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்திருந்த நிலையில், தற்போது நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வேல்முருகன் கறுப்புக் கொடி போராட்டத்தைக் கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் கறுப்புக்கொடி காட்டுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்தது. டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என தவாக தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்கப் பணிகளுக்கான புதிய டெண்டரில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

இந்நிலையில், தவாக தலைவர் வேல்முருகன், பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தைக் கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலக்கரி சுரங்கத் திட்டத்தைக் கண்டித்து இன்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை விமான நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நிலக்கரி சுரங்க டெண்டரில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி கைவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications