கலெக்டரையே மிரட்டுவீங்களா? கூப்பிட்டு கண்டித்த ஸ்டாலின்.. திமுக புள்ளிக்கு.. வீடியோவால் வந்த வம்பு
தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தர்மச்செல்வனுக்கு எதிராக, மாவட்ட திமுக நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். இதுகுறித்து அறிவாலயத்துக்கு எதிர்ப்புப் புகார்கள் குவிந்தபடி இருக்கிறது. மா.செ.வாக தர்மச்செல்வன் நியமிக்கப்பட்ட மறுநாளே, கலெக்டர் ஒருவரை இவர் மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் உருவாக்கியது. தான் மிரட்டப்பட்டது குறித்து தமிழக அரசின் தலைமைக்கு தகவல் தெரிவித்திருந்தார் கலெக்டர்.
மேலும், கலெக்டர் மிரட்டப்பட்டதை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்திருந்தன. கலெக்டரை மிரட்டிய தர்மச்செல்வனை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்; அவரால் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்று தர்மபுரி திமுகவில் புகைச்சல் வெளிப்பட்டது. கலெக்டர் மிரட்டப்பட்ட விவகாரத்தை முதல்வர் ஸ்டாலினிடம் உயரதிகாரிகள் கொண்டு சென்ற நிலையில், தர்மச்செல்வனை நேரில் அழைத்து கடுமையாக கண்டித்தார் ஸ்டாலின்.

தெரியாமல் செய்துவிட்டேன்
உடனே தர்மச்செல்வன், தெரியாமல் செய்து விட்டேன் தலைவரே ; இந்த ஒருமுறை மன்னியுங்கள் என்று மன்னிப்புக் கேட்டதால் அவரின் மா.செ. பதவி தப்பியது . இந்த நிலையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுகவின் ஒன்றியக்கழக நிர்வாகிகள், பேரூர்க்கழக நிர்வாகிகள், நகரக்கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து ட்ராவல்ஸ் பங்களாவில் 6-ந்தேதி மீட்டிங் போட்டார் தர்மச்செல்வன்.
இன்னொரு முகம் வரும்
அப்போது, ஆலோசனைக்கூட்டங்களில் நான் பேசுவதை பதிவு செய்து சோஷியல் மீடியாக்களில் ரிலீஸ் செய்கிறீர்கள். இதப்பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லை. இதுவரை நான் கவலைப்படவில்லை. இனி, நான் அப்படி இருக்க மாட்டேன். இனியும் இது மாதிரி ரெக்கார்ட் பண்ணி ரிலீஸ் செய்தீங்கன்னா என்னுடைய இன்னொரு முகத்தை பார்ப்பீங்க. தொலைச்சிடுவேன் தொலைச்சு. இந்த மாதிரி ரெக்கார்ட் பண்ணி ரிலீஸ் பண்றது, எனக்கு எதிராக அரசியல் பண்றதுன்னு வெச்சிக்கிட்டீங்கன்னா... பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கிவிடுவேன்.
இதை அட்வைஸாக எடுத்துக்கிட்டாலும் சரி, எச்சரிக்கையா எடுத்துக்கிட்டாலும் சரி. தொலைச்சிடுவேன். இதையும் ரெக்கார்ட் பண்ணி ரிலீஸ் பண்ணுங்க பார்ப்போம் என்று ஏகத்திக்கும் சொந்த கட்சியினரையே மிரட்டியிருக்கிறார் தர்மச்செல்வன். ஆனால், அவர் பேசுவதையெல்லாம் அப்படியே கேட்டுக்கிட்டு அமைதியாக போகக்கூடிய நிர்வாகிகள் தர்மபுரியில் இல்லை.
நீங்க நீக்குறீங்களா
அதை வெளிக்காட்டும் வகையில், அந்த கூட்டத்திலேயே, எங்களை நீங்க நீக்குவீங்களா? உங்களுக்கு அந்த அதிகாரம் இருக்கா? முதல்ல நீங்க பொறுப்பை உணர்ந்து எப்படி பேசனுமோ அப்படி நடத்துக்கங்க. இந்த மிரட்டல் வேலையெல்லாம் எங்கக் கிட்டே காட்டாதீங்க. எங்களை நீங்க நீக்குறீங்களா? நாங்க உங்களை நீக்குறோமான்னு பார்க்கலாம் என கோபமாக கொந்தளித்துவிட்டு, கூட்டத்தில் இருக்காமல் எல்லோரும் வெளிநடப்பு செய்தனர்.
இதில் மிரண்டு போன தர்மச்செல்வன், ஓடோடி வந்து சமாதானப்படுத்தி மீண்டும் உள்ளே அழைத்து செல்ல முயற்சித்தார். ஆனால், அவரது சமாதானத்தை ஏற்காமல், நீயே கட்சியை நடத்திக்க என்று சொல்லி விட்டு கிளம்பிப் போய்விட்டனர் மாவட்ட நிர்வாகிகள். இந்த சம்பவம், தர்மபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தான், தர்மச்செல்வனுக்கு எதிராக அறிவாலயத்துக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர் உடன் பிறப்புகள். மா.செ.வாக தர்மச்செல்வன் நீடித்தால் தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் தேர்தல் பணிகளை செய்யமாட்டோம் என புகாரில் தெரிவித்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications