வீட்டு செலவுக்கு காசு இல்லை! மிளகாய் பொடி தூவி கவுன்சிலர் வீட்டிலேயே கைவரிசை.. யாருங்க இந்த பெண்?
செங்கல்பட்டு: பட்டப்பகலில் திமுக கவுன்சிலர் வீட்டில் மிளகாய் பொடி தூவி துணிகர கொள்ளை நடந்தது செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சிசிடிவி கேமிரா உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டில் இது போன்ற கொள்ளை சம்பவம் தொடர்ந்த நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆளில்லாதபோது வருகை
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சரவண பொய்கை குளம் அருகேதான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடு திமுக மாவட்ட கவுன்சிலராக உள்ள ஜெயச்சந்திரனுக்கு சொந்தமானதாகும். இவர் உடல்நலம் சரியில்லாத தனது மனைவியுடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இல்லாத நேரம் பார்த்து, வீட்டிற்கு யாரோ வந்துள்ளனர். மனைவி மேகலா சிரமத்துடன் சென்று யார் என பார்த்துள்ளார்.

“தண்ணி வேண்டும்”
சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனையடுத்து மெதுவாக உள்ளே சென்று தண்ணீரை கொண்டு வந்து கொடுத்துள்ளார் மேகலா. இதை பெற்றுக்கொண்ட அந்த பெண்மணி கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடமிருந்த மிளகாய் பொடியை மேகலா மீது வீசியுள்ளார். இதனால் மேகலா நிலைகுலைந்துள்ளார். என்ன செய்வதென்றே தெரியாமல் கண்களை கசக்கி கொண்டு நின்றிருந்த நிலையில் அந்த பெண் மேகலாவின் கழுத்திலிருந்த 10 சவரன் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

தனிப்படை
ஒருபுறம் உடல் நலக்குறைவு, மறுபுறம் மிளகாய் பொடியின் எரிச்சல் என அவதிப்பட்ட மேகலாவால் அந்த பெண்ணை உடனடியாக பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கணவருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி சுகுணா சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கொள்ளையடித்து சென்ற பெண்ணை பிடிக்க திருப்போரூர் காவல் ஆய்வாளர் லில்லி, உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வீட்டு செலவுக்கு
தனிப்படை போலீசார் ஒருபுறம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறுபுறம் சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது சிட்லபாக்கத்தை சேர்ந்த லதா என்பது உறுதியானது. மட்டுமல்லாது இந்த பெண், கவுன்சிலர் ஜெய்சந்திரனுக்கு உறவினர் என்பதும் தெரியவந்தது. மேலும், லதாவின் கணவர் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததால் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டு வந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications