தப்புத் தாளங்கள்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை போட்டுத் தள்ளிய கல்லூரிப் பெண் !
சென்னை: சென்னையில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (19). கடந்த 3-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து சோமங்கலம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது கமலக்கண்ணனின் செல்போனுக்கு கடைசியாக வேலூர், சத்துவாச்சேரியை சேர்ந்த காதலி ரேணுகாதேவி பேசியிருப்பது தெரிந்தது.
இதையடுத்து ரேணுகா தேவியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கள்ளக்காதலன் மணிகண்டனுடன் சேர்ந்து கமலக் கண்ணனை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார்.
கைதான ரேணுகா தேவி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு தாய்-தந்தை இல்லை. உறவினர் வீட்டிலேயே தங்கி இருந்தார். கொலையுண்ட கமலக்கண்ணனுக்கும் தாய்-தந்தை இல்லை. அவரும் உறவினரிடமே வளர்ந்து வந்துள்ளார். தவறான காதல் அவரது உயிரை பலிவாங்கி விட்டது.
ரேணுகாதேவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
நானும், கமலக்கண்ணனும் பள்ளி படிப்பை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அனாதை விடுதியில் தங்கி படித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. உடனே எங்களை விடுதியில் இருந்து நீக்கி விட்டனர். சொந்த ஊருக்கு வந்த நாங்கள் அவரவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம்.
கமலக்கண்ணனுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தேன். இந்த நிலையில் திருமணமான உறவினர் மணிகண்டனுடன் (பெரியம்மா மகளின் கணவர்) எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்தோம். இதற்கிடையே பழைய காதலனான கமலக்கண்ணன் எனது செல்போனுக்கு அடிக்கடி பேசினார். நேரில் பார்க்க வேண்டும் என்று தொந்தரவு கொடுத்தார். எனவே கமலக்கண்ணன் குறித்து மணிகண்டனிடம் கூறினேன். உடனே அவர் கமலக்கண்ணனை தீர்த்து கட்டிவிடலாம் என கூறினார். இதற்கும் நானும் சம்மதித்தேன்.
கடந்த 3ஆம் தேதியன்று கமலக் கண்ணனை செல்போனில் பேசி அமரம்பேடு ஏரிக்கரைக்கு வருமாறு கூறினேன். இது பற்றி மணிகண்டனுக்கு தெரிவித்தேன். உடனே அவர் கூட்டாளிகளுடன் அங்கு காத்து இருந்தார். நான் ஏரிக்கரைக்கு செல்லவில்லை. கமலக்கண்ணன் அங்கு வந்ததும் அவரை வெட்டி கொலை செய்தனர். அவர் இறந்தவுடன் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் எதுவும் தெரியாதது போல் வீட்டில் இருந்தேன் என்று அசல்டாக கூறி அதிரவைத்தார்.
கமலக்கண்ணன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது காதலி ரேணுகாதேவி என்னை அழைத்துள்ளார் என்று தெரிவித்து இருக்கிறார். இதனை துருப்பு சீட்டாக வைத்தே போலீசார் விசாரணை நடத்தினர். கமலக்கண்ணன் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அடிக்கடி ரேணுகாதேவிக்கு பேசியது தெரிந்தது. இதனை வைத்தே போலீசார் அவரை கைது செய்து விட்டனர்.
இந்த கொலை தொடர்பாக தலைமறைவான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளைஞர் கொலையில் கல்லூரி மாணவி சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.