சென்னையில் 3–வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி: படுகாயம்
சென்னை: சென்னையில் லிவ் இன் நண்பரின் தொந்தரவு காரணமாக மூன்றாவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரம் பரசுராம ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி (30). இவரது லிவ் இன் நண்பர் சிவகுமார். திருவண்ணாமலையை சேர்ந்த சிவகுமார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அயனாவரத்தில் ஒரு பாஸ்ட்ஃபுட் கடையில் வேலை பார்த்தார். அப்போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.
இதற்கு தேவி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு சென்று அங்கு திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தினர். இவர்களுக்கு பாலாஜி (6), இமானுவேல் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சிவகுமாரிடம் இருந்து பிரிந்த தேவி தனது மகன்களுடன் சென்னை அயனாவரம் வந்தார்.
அம்பத்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் தனது மகன்களை சேர்த்தார். அவர்களை அடிக்கடி சென்று பார்த்து வருகிறார். இந்த நிலையில் குழந்தைகளை தன்னுடன் அனுப்பும் படி தேவியிடம் சிவகுமார் கேட்டார்.
அதற்கு அவர் மறுக்கவே குடும்பநலக் நீதிமன்றத்தில் சிவக்குமார் வழக்கு தொடர்ந்தார். முடிவில், குழந்தைகள் தேவியுடன் வளர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருந்தும் சிவகுமார் தேவியை நிம்மதி ஆக இருக்க விடவில்லை.
சமீபத்தில் தேவிக்கு ஒரு கடிதம் எழுதினார். எப்படியும் குழந்தைகளை உன்னிடம் இருந்து பிரித்து கொண்டு செல்வேன் என மிரட்டியிருந்தாராம்.
இதனால் தேவி மன உளைச்சலில் இருந்தார். இவர் முதல் மாடியில் குடியிருக்கிறார். ஆனால் இவரது வீட்டுக்கு அருகே 3 மாடியுடன் கூடிய வீடு உள்ளது.
இன்று அதிகாலை யாருக்கும் தெரியாமல் சென்று அவர் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். வேதனை தாங்காமல் அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
3-வது மாடியில் இருந்து குதித்ததால் அவரது 2 கால்களும் முறிந்தன. தலை மற்றும் உடலிலும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து அயனாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications