பழிக்குப் பழி: கணவனை கொலை செய்தவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி
கோவை: மேட்டுப்பாளையம் அருகே, தனது கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த கொலையாளியை அதே பாணியில் கொன்று விட்டு ரத்தக்கறையுடன் சென்று போலீசில் சரணடைந்துள்ளார் ஒரு பெண்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி. இவரை கடந்த ஆண்டு, அதேப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ரவிக்குமார், கடந்த 14ம் தேதி ஜாமீனில் வெளி வந்தார்.
பின்னர் காளிபாளையத்துக்கு சென்ற ரவிக்குமார், தான் கொலை செய்த பெரிய தம்பியின் மனைவி சுகந்தாமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார்.
இந்த சமயத்தில், அவரைப் பழி வாங்க நினைத்த சுகந்தாமணி, ரவிக்குமாரை கீழே தள்ளிவிட்டு அவரது தலையில் பெரிய கல்லை எடுத்துப் போட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் அதே இடத்தில் இறந்து போனார்.
சுகந்தாமணியின் உடையில் ரத்தம் சிதறியது. அதே ரத்தக்கறையுடன், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று அவர் சரண் அடைந்தார். நடந்த சம்பவம் தொடர்பாக சுகந்தாமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.