கணவரை கைது செய்ய வந்த போலீஸ் கண்முன்னே தீக்குளித்த மனைவி பலி.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை கைது செய்ய சென்ற போலீசார் கண்முன்னே, அவரது மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. சமீபத்தில் சிறைக்கு சென்று விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் மற்றொரு வழக்கில், மோகனை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சிவமணி மற்றும் உதவி ஆய்வாளர் சேகர் உட்பட சில போலீசார் வந்தனர். அப்போது மோகனை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு மோகன் மனைவி பத்மாவதி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே திடீரென பத்மாவதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பத்மாவதி உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பத்மாவதியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications