ரூ.136 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு: பெண் துணை தாசில்தார் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில், அரசுக்கு சொந்தமான 136 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில், முன்னதாக'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, பெண் துணை தாசில்தார் புனிதவதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 136 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. அரசின் சார்பில், இந்த நிலத்தை யாருக்கும் பட்டா போட்டு தருவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் 8ம் தேதி 'இந்த நிலத்தை, வருவாய் துறை அதிகாரிகள் சிலர் உதவியுடன், சட்டவிரோத கும்பல் அபகரித்து விட்டனர்' என சென்னை, போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில், சோழிங்கநல்லூர் துணை தாசில்தாராக பதவி வகித்த சோலையூரைச் சேர்ந்த, புனிதவதி (42 ), தனது பதவியை தவறாக பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அரசு நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த நடராஜனுக்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக நடராஜனிடமிருந்து புனிதவதி கோடிக்கணக்கில் பணம் பெற்றிருப்பதும் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து புனிதவதியைப் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக கடந்த மே மாதம் 26ம் தேதி சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரில், துணை தாசில்தார் புனிதவதி போலி ஆவணங்கள் தயாரித்து 89 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகார் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில், ஏற்கனவே புனிதவதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். கைது காரணமாக அவர் சஸ்பெஸ்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது புனிதவதி மீது இந்தப் புதிய அரசி நிலத்தை முறைகேடாக பட்டா போட்டுக் கொடுத்த புகாரும் சேர்ந்துள்ளது. அடுத்தடுத்த வழக்குகளில் புனிதவதி கைது செய்யப்பட்டு வருவதால், வருவாய் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, புனிதவதியிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications