மிஸ்டுகாலால் சீரழிந்த வாழ்க்கை... முதல் மனைவியை மறைத்து மறுமணம் செய்த வாலிபர் கைது
நீலகிரி: செல்போனில் மிஸ்டுகால் மூலம் பூத்த காதலால், தனது முதல் மனைவிக்குத் தெரியாமல் மறுமணம் செய்த குற்றத்திற்காக தற்போது கம்பி எண்ணி வருகிறார் குன்னூரரைச் சேர்ந்த ஒருவர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மஞ்சூரை சேர்ந்த செல்வதுரையின் மகனான சதீஷ் ஆலாந்துறை செம்மேடு காந்தி காலனியை சேர்ந்த அப்புச்சி சின்னானின் மகள் பட்டத்தரசி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். குடும்பத்துடன் மாமனார் ஊரிலேயே சதீஷ் தங்கினார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு மிஸ்டு கால் மூலம் சதீஷூக்கு அறிமுகம் ஆனார் கோவையைச் சேர்ந்த சிவசங்கரி என்ற பெண். சிவசங்கரியிடம் தன்னை மணமாகாதவர் என அறிமுகம் செய்து கொண்ட சதீஷ், செல்போன் நட்பை காதலாக்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பட்டத்தரசிக்குத் தெரியாமல், சிவசங்கரி குடும்பத்தாரின் முழு சம்மதத்திடன் சிவசங்கரியத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். தொடர்ந்து சிலகாலமாக தன்னுடைய கணவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பட்டத்தரசி, மாமனார் வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது வெளியான முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் சந்தேகமடைந்த பட்டத்தரசி தன் பெண் குழந்தையை அங்கே விட்டுச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மகளை பட்டத்தரசியிடம் விட்டுச் செல்வதற்காக வந்த சதீஷிடம் விசாரணை நடத்தியுள்ளனர் பட்டத்தரசியின் உறவினர்கள்.
அப்போது தனக்கு நடந்த இரண்டாவது திருமணம் குறித்துத் தெரிவித்துள்ளார் சதீஷ். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பட்டத்தரசி மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.