கணவரின் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி
மதுரை: கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய சடலத்துடன் ஒரே வீட்டில், மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி மூன்று நாட்கள் வாழ்ந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (61). இவரது மனைவி நாகேஸ்வரி. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. பிளக்ஸ் போர்டு கட்டும் தொழில் செய்து வரும், இவர்களது மகன் மணிகண்டன் (35) தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார் மணிகண்டன். நேற்று மாலை ஊர் திரும்பிய மணிகண்டனுக்கு நடராஜனின் வீட்டிற்கு அருகே இருப்பவர்கள் போன் செய்தனர். அப்போது நடராஜனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பெற்றோரைப் பார்க்க விரைந்து வந்தார் மணிகண்டன். அங்கே கட்டிலில் நடராஜனின் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அருகிலேயே தாய் நாகேஸ்வரியும் இருந்துள்ளார்.
என்ன நடந்தது என்பது குறித்து நாகேஸ்வரியிடம் விசாரித்த போது, அவர் எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.
உடனடியாக இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னரே நடராஜன் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மனநிலை பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி அதை யாருக்கும் தெரிவிக்காமல், சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.