சென்னை: இன்ஜினீயர் மனைவி மர்மக் கொலை போலீசார் விசாரணை
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் மகளுடன் தனியாக இருந்த இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் லஸ் அவென்யூ குடியிருப்பு உள்ளது. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரோசன் சங்கர் (35) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்தார்.
சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த இவருக்கு சமீபத்தில் துபாயில் வேலை கிடைத்தது. எனவே மனைவி பூஜா (30), மகள் பிட்டோ (7) ஆகியோரை மாடம்பாக்கம் வீட்டிலேயே விட்டுவிட்டு வெளிநாடு சென்றார். நேற்று இரவு பூஜா தனது மகள் பிட்டோ உடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் வேறு வேறு அறையில் படுத்திருந்தனர்.
இன்று காலை கண் விழித்த சிறுமி, தாய் படுத்திருந்த அறைக்கு சென்றாள். அங்கு பூஜா அலங்கோலமான நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை கண்டதும் சிறுமி சத்தம் போட்டு அழுதுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் பிணமான பூஜாவின் மார்பிலும், வயிற்றிலும் கத்திக்குத்து காயம் இருந்தது. இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் அஸ்லம்பாட்சா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குழந்தை பிட்டோவையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். வீட்டில் பொருட்கள் திருடப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே, யாராவது தவறான நோக்கத்துடன் பூஜாவிடம் நெருங்கினார்களா? அவர் மறுத்ததால் குத்திக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அடிக்கடி வீட்டுக்கு வரும் யாராவது இந்த கொடூர கொலையை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துபாயில் உள்ள பூஜாவின் கணவருக்கும் கொலை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உள்புறம் கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் பால்கனி கதவு திறந்து கிடந்தது. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கைப்பற்றினார்கள். கொலை செய்யப்பட்ட பூஜாவின் செல்போனில் அவர் அடிக்கடி பேசிய, எஸ்.எம்.எஸ். அனுப்பிய நம்பர் கிடைத்துள்ளது. அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. இந்த கொலை சம்பவம் மாடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications