வாழ்க்கையை மீட்டுத்தாருங்கள்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்: மாமியார் வீட்டில் கொடுமைப் படுத்துவதாகவும், தனது கணவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வதாகவும் இதை தடுத்து நிறுத்தக்கோரியும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்த பெண்ணை போலீசார் அழைத்து சென்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(வயது27). இவர் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். நீதி வேண்டி தொடர் உண்ணாவிரத போராட்டம் என்று எழுதப்பட்டிருந்த அட்டையையும் அவர் கையில் வைத்திருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்த முத்துலட்சுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முத்துலட்சுமி,நானும் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த காமராஜ் என்பவரும் காதலித்து கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். பின்னர் 4 ஆண்டுகள் ஒரத்தநாடு பின்னையூரில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தோம். அதன் பிறகு எனது கணவர் என்னை வேண்டாம் என்று செல்லிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்தார்.
இது குறித்து பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். மேலும் ஊர் பெரியவர்கள் என்னையும், என் கணவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தன் மீதான புகாரை திரும்ப பெற்று கொண்டால் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் கூறினார். இதனால் நான் புகாரை திரும்ப பெற்றேன்.
பின்பு நாங்கள் இருவரும் திருச்சி மலைக்கோவில் அருகே உள்ள சோழபுரம் நொச்சிவயல் பகுதியில் வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக எனது கணவர், அவரது தாய் மற்றும் உறவினர்கள் என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி எனது கணவருக்கு மீண்டும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து திருவெறும்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இதையடுத்து கடந்த 5 நாட்களாக எனது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் 5 நாட்களாக வீட்டிற்கு வெளியில் தான் தங்கியிருந்தேன்.
என்னை துரத்துவதற்காக எனது கணவர், மாமியார், மற்றும் அவரது உறவினர்கள் முயன்று வருகிறார்கள். அதை தடுத்து கணவருடன் என்னை சேர்த்து வைத்து, எனது வாழ்கையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் கலெக்டரிடம் கொடுப்பதற்காக கோரிக்கை மனுவும், திருமணத்தின்போது எடுத்து கொண்ட புகைப்படத்தையும் முத்துலட்சுமி கொண்டு வந்திருந்தார். இது தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications