நகை, பணம் பறிப்பு… ஓடும் ரயிலில் இருந்து நெல்லை பெண்ணை கீழே தள்ளிய கொள்ளையர்கள்
நெல்லை: நெல்லையில் இருந்து மும்பை சென்ற ஹாபா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த நெல்லை பெண்ணிடம் நகையை பறித்த கொள்ளையர்கள் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஜோதி என்பதாகும். இவர் பாளையங்கோட்டை நந்தனார் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரியப்பன் என்பவரின் மனைவியாவார். இவர் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் மூன்று நாட்களுக்கு முன்பு நெல்லையில் இருந்து கேரளா வழியாக செல்லும் ஹாபா எக்ஸ்பிரஸ் ரயிலில் மும்பை சென்றுள்ளார்.
இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு கோவாவில் உள்ள மார்கோவா ரயில் நிலையம் சென்றுள்ளது. அப்போது அதிகாலை நேரம் என்பதால் ரயிலில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் மார்கோவா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும் போது ஜோதி இருந்த பெட்டியில் ஏறி அவரை தாக்கியுள்ளனர். அவரிடமிருநது மூன்றரை பவுன் நகையை பறித்துள்ளனர்.
தூக்கத்தில் இருந்த ஜோதி விழித்து கொண்டு கொள்ளையர்களைத் துரத்தினார். அப்போது அவரது கையில் இருந்த பையையும் கொள்ளையர்கள் பறித்து கொண்டு ரயிலில் இருந்து ஜோதியை கீழே தள்ளினர். ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கையிலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. ரயில் மெதுவாகச் சென்றதால் சிறு சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
இதனால் அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஜோதி இருட்டில் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் இருந்த ரயில் நிலையத்துக்கு சென்றார். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற பையில் ஏடிஎம்கார்டு, 3 ஆயிரம் ரொக்கம், வாக்காளர் அடையாள அட்டை உள்பட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது. போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தபோது மொழி தெரியாததால் அவரது உறவினருக்கு போனில் தகவல் தெரிவித்து இந்தியில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் பக்கத்து ரயில் நிலையத்தை சேர்ந்த காவல் துறையினர் மார்கோவா ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு ஜோதியின் தாய் பயணம் செய்த பெட்டியை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொங்கன் மார்கோவா ரயில் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.