'பின்'னால் குத்துங்கள், மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவுங்கள்.. மாணவிகளுக்கு பெண் எஸ்.ஐ.யின் ஆலோசனை!!
திருத்தணி: உங்களிடம் அத்துமீறி நடக்கும் ஆண்களின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவுங்கள். சேப்டி பின்னை வைத்து சரமாரியாக குத்துங்கள். எதற்கும் பயப்படாதீர்கள். அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று துணிச்சலாக புகார் கூறுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் உள்ளனர் என்று பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள ஆலோசனை கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாட்டம் திருத்தணியில் அரசு மகளிர் காப்பகங்களான ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி, கே.கே.நகர் மாணவர் விடுதி, கலைஞர் நகர் மாணவர் விடுதி, கே.ஜி.கண்டிகை அரசு பள்ளி, மத்தூர் அரசு விடுதி, மேட்டுத் தெருவில் உள்ள கருணை இல்ல மாணவிகள் விடுதி, தாமனேரி உண்டு உறைவிடம் சிறுமியர் பள்ளி, மேல் நெடுங்கல் மரியம் காப்பகம் ஆகியவை உள்ளன.
இங்கு, 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளுக்கு பொது இடங்களில் பாலியல் தொந்தரவை சமாளிப்பது குறித்து திருத்தணி பெண்கள் சப்இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:

கூச்சலிடுங்கள்
பொது இடங்களான பஸ் மற்றும் கோயில்கள் ஆகிய இடங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுகளை ஏதேனும் ஆசாமிகள் செய்தாலோ அல்லது சில்மிஷம் என்ற பெயரில் போலியான பாசம் என்ற பெயரில் தொட்டு பேச முற்பட்டாலோ அவர்களுக்கு அனுமதி கொடுக்காமல் கூச்சலிட்டு தீயவர்களிடம் இருந்து விடுபடவேண்டும்.

புகார் கொடுங்கள்
மேலும் பள்ளி பகுதியில் ஆசிரியர்கள் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாலோ, பெற்றோர் அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவியுங்கள். உங்கள் பெயர் ரகசியம் காக்கப்படும்.

பின்னை வைத்துத் தாக்குங்கள்
வெளியூர் மற்றும் பஸ் பயணம் செய்யும்போது யாராவது பாலியல் தொந்தரவு கொடுக்க முற்பட்டால் சேப்டி பின் கொண்டு முதலில் அவர்களை தாக்குங்கள். மிளகாய்ப் பொடியை அவர்களின் கண்களில் தூவுங்கள். இப்படி உங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

பேசாதீர்கள்
முகம் தெரியாத ஆண் நபர்கள் உங்களிடம் பேச முற்பட்டால் நீங்கள் பேச வேண்டாம். மேலும் உங்கள் தாய்க்கு அல்லது தந்தைக்கு அடிபட்டுள்ளது வாருங்கள் என்று கூப்பிட்டால் செல்ல வேண்டாம்.

தைரியமாக புகார் கொடுங்கள்
பெண் பிள்ளைகளான உங்களுக்கு மன ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ ஏதேனும் மர்ம ஆசாமியால் தொந்தவு ஏற்பட்டால் தைரியமாக அருகில் உள்ள காவல்நிலையங்களில் கூறுங்கள் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.












Click it and Unblock the Notifications