ஜிஎஸ்டி பற்றி கேள்வி கேட்ட பெண்ணின் வீடு புகுந்து அசிங்கமாக பேசி தாக்கிய பாஜகவினர்.. திருப்பூரில்!
திருப்பூர்: ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக கூறிய பெண்ணை, கடைக்குள் நுழைந்து பாஜகவினர் மிரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் கடைக்குள் புகுந்து பாஜக தொண்டர்கள் அராஜகம் செய்துள்ளனர்.

பாஜக தொண்டர்கள், சங்கீதா என்ற அந்தப் பெண்ணின் கடைக்குள் நுழைந்து, அநாகரிகமான வார்த்தைகளால் பேசியதோடு, அப்பெண்ணைத் தாக்கியுள்ளனர். வேட்பாளரின் வண்டியை மறித்ததாக அப்பெண்ணின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆனால், அப்பெண், தான் வேட்பாளரின் வண்டியை மறிக்கவில்லை என்றும், கேள்வி தான் கேட்டேன் என்றும் கூறுகிறார். ஆனால் தொடர்ந்து, அவரிடம் அசிங்கமாக பேசி பாஜகவினர் தாக்க முற்படும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் அப்பெண். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தன்னை தாக்கிய பாஜக நிர்வாகி சின்னச்சாமி என்பவர் மீது சங்கீதா காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேள்வி கேட்ட பெண்ணை பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications