ஊரெல்லாம் எதிரொலிக்கும் பெண்களின் அழுகை கூக்குரல்.. உலுக்குகிறது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்த நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பெண்களின் மரண ஓலம் காதை கிழிக்கும் அளவுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து வயிற்று போக்கு, வயிற்றெரிச்சல், மயக்கம் ஏற்பட்டு 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுவை ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த மருத்துவமனைகள் முழுவதும் மக்களின் மரண ஓலம் கேட்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் பெண்கள், உறவினர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து அங்கு பெண்கள் அழும் காட்சி கல்லையும் கரைய வைக்கும் அளவுக்கு உள்ளது. அதில் தாய் ஒருவர், என் ஊரை சாச்சிட்டாங்க, 2 நாளுக்கு முன்னர் கனவு கண்டேனே! உலகமே பறக்குது, ஏரோபிளானே பறக்க மாதிரி கும்பல் கும்பலாக இருந்ததே கனவுல!
இதெல்லாம் என் மவன் கிட்ட நான் சொன்னேன்! கனவுல அழைப்பு வந்திருக்குது ஐயா, நீ பத்திரமா இருன்னு நான் சொன்னேன் என அந்த தாய் கதறினார். இன்னொரு பெண் , "பெங்களூரில் வந்து என்னை பார்க்கிறேனு சொன்னியே" என கலங்கினார். இவ்வாறாக ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்களை நினைத்து கலங்கி வருகிறார்கள்.
பின்னணி என்ன?: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக சுமார் 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45),சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சேலம் அரசுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75), தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை வரை பலியானோரின் எண்ணிக்கை 29ஆக இருந்த நிலையில் தற்போது சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன் என்பவர் பலியாகிவிட்டார். மேலும் சிலர் பலியானதால் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துவிட்டது. இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்












Click it and Unblock the Notifications