உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் என்ற அளவில் இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
14வது சட்டசபையின் 11வது கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக ஆட்சியின் கடைசி கூட்டத் தொடரில் கடைசி நாள் என்பதால் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சட்டசபையில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
தற்போது நகர உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்டங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளில் மொத்த எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில் உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் அதிகாரம் அளிக்கப்பெறுவதை மேம்படுத்தும் வகையிலும் பெண்கள் பங்கு கொள்வதை எளிதாக்கும் வகையிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு விழுக்காடு மூன்றில் ஒரு பங்காக இருப்பதை 50 சதவீதம் என அதிகரிக்க செய்வது தேவையென அரசு கருதுகிறது.
இதற்கேற்ப அனைத்து மாநகராட்சிகளின் சட்டங்கள் மற்றும் 1994ம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
14வது சட்டசபையின் கடைசி நாள் என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா இன்றே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி, பேரூராட்சி போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் என்ற அளவில் இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக ஒதுக்கப்படும். இந்தியாவை பொருத்தவரை கர்நாடக மாநிலதிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications