இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் அமைதி காக்கும் அதிமுகவின் 'மண்சோறு' புகழ் முப்பெருந்தேவியர்!
அதிமுக இணைப்பு, இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மாறி மாறி குற்றச்சாட்டுகள் என அதிமுகவில் இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அக்கட்சியின் மூத்த பெண் தலைவர்கள் வழக்கத்துக்கு மாறாக மௌனம் காத்து வருகிறார்கள்.
சென்னை: அதிமுக இணைப்பு, இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மாறி மாறி குற்றச்சாட்டுகள் என அதிமுகவில் இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அக்கட்சியின் மூத்த பெண் தலைவர்கள் வழக்கத்துக்கு மாறாக மௌனம் காத்து வருகிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. அவர் மறைந்த நாள் முதல் அதிமுகவின் முப்பெரும் தேவியர்களான வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சசிகலாவுடன் இருந்தனர்.
ஓபிஎஸ் அணியினர் சசிகலாவுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அந்த பெண் தலைவர்கள் மறுப்பு பதில் அளித்தே வந்தனர். மேலும் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை குறித்து பல்வேறு தலைவர்களின் கருத்துக்கு அவர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர்.

ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரி ஓ.பன்னீர் செல்வம் மாநிலம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தும் பெண் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதுபோல் போயஸ் தோட்டத்திலேயே டென்ட் அடித்தவர்கள் போல் எந்த பிரச்சினை என்றாலும் அங்கு ஆஜராகிவிடுவர்.

நிர்மலா பெரியசாமியுடன் மோதல்
அதிமுகவின் சசிகலா அணி சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி பேசுகையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பேசியதால் வரிந்து கட்டிக் கொண்டு வந்த வளர்மதியும், சி.ஆர். சரஸ்வதியும் நிர்மலா பெரியசாமியை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. அப்போது சொந்த தொகுதியை தக்கவைத்து கொள்ள வக்கில்லாத வளர்மதி என்று நிர்மலா கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக கூட்டங்கள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வளர்மதி பிரசாரம் செய்ததோடு சரி. அதன் பிறகு, எந்த கூட்டங்களிலும் பெரும்பாலான பெண் அமைச்சர்களையும் மூத்த தலைவர்களையும் பார்க்க முடிவதில்லை. அமைச்சர் நிலோபர் கபீல் மட்டுமே அவ்வப்போது பங்கேற்று வருகிறார். ஏனைய அமைச்சர்களான ராஜலட்சுமி, மறறொரு வளர்மதி, சரோஜா, தமிழ்நாடு பாடநூல் தலைவர் வளர்மதி உள்ளிட்டோரை எங்கும் காணவில்லை.

அதிமுக இணைப்பு
முக்கிய பிரச்சினைகளான அதிமுக இணைப்பு பற்றி பேச்சுவார்த்தை ஆகட்டும், ஆலோசனை கூட்டங்களாகட்டும், சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்த நள்ளிரவு கூட்டங்களாகட்டும் முப்பெரும் தேவியர் உள்பட எந்த பெண் அமைச்சர்களும் இடம் பெறவில்லை.

யாருக்கு ஆதரவு?
இந்த திடீர் மௌனத்திற்கான காரணம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஜெயலலிதா மறைந்தபோதிலிருந்தே எந்த அணிக்கு ஆதரவு தருவது என்று உறுதியாக தெரியாததால் சிறிது தயக்கத்துடன் பெண் தலைவர்கள் இருந்தனர் என்றன. எனினும் இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சரஸ்வதியிடம் கேட்டபோது, பேச அவர் மறுத்துவிட்டார்.

ஒழுக்கத்தை பின்பற்றுதல்
நிர்மலா பெரியசாமியால் பட்டம் சூட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் கேட்டபோது, கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்கிறோம். அதிமுக நடைபெறும் நிலவரம் குறித்து ஆளாக்கு கருத்து தெரிவித்தால் அது குழப்பத்துக்கு வழி வகுக்கும் என்பதால் தேவையில்லாத கருத்துகளை பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளோம் என்றார்.

மாறுப்பட்ட கோகுல இந்திரா
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திராவிடம் கேட்டபோது, நாங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தமில்லை. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களிலும், தொலைகாட்சி விவாதங்களிலும் கலந்து கொண்டுதான் வருகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications