சுவாதி வழக்கு.... திருமாவளவன் மீது நடவடிக்கை கோரி போலீசில் பெண்கள் சங்கம் புகார்
சென்னை: படுகொலை செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் கலைச்செல்வி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர் போலீசாரின் சீரிய முயற்சியால் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார்.
மத பிரிவினைவாத குற்றங்களை தூண்டும் விதத்தில் ரம்ஜானுக்கு சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரமில்லாத அவதூறுகளை தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கள் சுவாதி கொலையில் கைதான ராம்குமாருக்கு மட்டுமின்றி பல குற்றவாளிகளுக்கும் ஆதரவாக இருக்கிறது.
இந்து-முஸ்லிம்களிடையே மத மோதல்களை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளது. இது போன்று குற்றங்களை தூண்டி வரும் திருமாவளவன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா தொடர்ந்து திருமாவளவனை விமர்சித்து வருகிறார். இதனால் ஹெச். ராஜாவின் கொடும்பாவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications