நல்ல கணவன் கிடைக்க வேண்டும்... குற்றாலத்தில் கன்னிப் பெண்கள் வழிபாடு
குற்றாலம்: குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று கன்னிப்பெண்களும், கணவர் நல்ல சுகத்துடன் இருக்க வேண்டும் என்று திருமணமான பெண்களும் வழிபாடு நடத்தினர்.
பெண்களின் வழிபாடு காரணமாக குற்றாலம் மெயின் அருவியே பெண்கள் மயமாகக் காணப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் விசேஷமே
இந்துக்களுக்கு அனைத்து தமிழ் மாதங்களிலும் எதாவது ஒரு முக்கிய விரதம்,பூஜைகள்,திருவிழாக்கள்,வருவது உண்டு.
பெண்களுக்கான மாதங்கள்
அதிலும் பெண்களுக்கு தீபாவளி முதல் கார்த்திகை, மார்கழி, தை, பங்குனி, சித்திரை என அனைத்து மாதங்களிலும் திருவிழாக் காலங்கள் வந்து விட்டால் வேலைப்பளுவும் அதிகமாக இருப்பது மறுக்க முடியாதது.
கார்த்திகை சிறப்பு
கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே வரிசையாய் சிறப்பு தினங்கள் தான். நேற்று கார்த்திகை தீபதிருநாள். இன்று முதல் கார்த்திகை மாதம் முடியும் வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமாவிரத தினங்கள்.
பெண்கள் வழிபாடு
இன்று முதல் சோமாவார நாளை முன்னிட்டு கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணமான ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் கன்னி பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும் அதிகாலை 4 மணி முதலே குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி குற்றாலம் செண்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகரை வழிபட்டுவிட்டு அங்குள்ள அரச மரத்தின் அடியில் பழத்தை விளக்காக்கி அதில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
9 மணி வரை பெண்கள் மட்டுமே
பின்னர் குற்றால நாதரை வணங்கி சென்றனர். அதிகாலை 4 மணி முதல் மெயின் அருவியில் பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 9 மணிக்கு மேல் ஆண்களையும் குளிக்க அனுமதித்தனர்.