நெல்லையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருவதால் பெண்கள் அங்காங்கே போராட்டம் வெடித்து வருகிறது.
நெல்லை: பருவமழை பொய்த்துப்போய் அணைககளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் பெண்கள் நூலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை அருகே கல்லிடைக்குறிச்சியில் வைராவிகுளம் ஊரட்சிக்குட்பட்ட கலைஞர் நகர், ராஜீவ் நகர், பசும்பொன் நகர், சங்குமுத்து நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
2015 - 16 எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இதுவரை தண்ணீர் நிரப்பப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இது போன்று அங்குள்ள சிறு சிறு மின் விசை சின்டெக்ஸ் டேங்க் போன்றவையும் பயனற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து பலமுறை முன்னாள் ஊராட்சி தலைவர் பாவநாசம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர் காலிக்குடங்களுடன் எம்ஜிஆர் நகர் நூலகத்தை முற்றுகையிட்டு, மாநகராட்சிக்கு எதிராக முழக்கமிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.