அசிங்கம் அசிங்கமாக எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள்... ஆத்தூரில் பெண்கள் போராட்டம்
சேலம்: குடும்பப் பெண்களுக்கு ஆபாசமான முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் அயோக்கியர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காத போலீஸைக் கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம், காந்திபுரம், சமத்துவபுரம், காட்டுகோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள், கடந்த சில மாதங்களாக தங்களுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், இதனால், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுவதாகவும், பெண்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பும் நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கெனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் மனு அளித்து இருந்தனர்.
ஆனால், போலீசார் இதுகுறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டனர். அனைவரும் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பிய அயோக்கியர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications