குடி தண்ணியில புழு.. எப்படி குடிப்பது.. சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு பெண்கள் சரமாரிக் கேள்வி
புழு கலந்து வரும் குடிநீரை எப்படி குடிப்பது என பெண்கள், தமிழக சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
அவிநாசி: கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன.
கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.
இதனால் பொதுமக்கள் காலிக் குடங்களோடு சாலைகளில் சுற்றித் திரிந்து குடிநீரை பிடித்துச் செல்கின்றனர். குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காத மக்கள் ஆத்திரமடைந்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காலிக் குடங்களுடன் பெண்கள்
அதே போன்று இன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பெண்கள் தண்ணீர் கிடைக்காத கடுப்பில் இருந்தனர். காலிக் குடங்களுடன் சாலையில் அலைந்து கொண்டிருந்த போது தமிழக சபாநாயகர் தனபால் அந்தப்பக்கமாக சென்றுள்ளார்.
சபாநாயகர் முற்றுகை
இதனைப் பார்த்த பெண்கள் அவரை சுற்றி வளைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத சபாநாயகர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
புழு கலந்து தண்ணீர்
கடந்த 6 மாதமாக குடிநீரில் புழு கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் சபாநாயகரிடம் எடுத்துக் கூறினர். மேலும், தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருவதையும் பெண்கள் கூறினார்கள்.
பேச்சுவார்த்தை
சபாநாயகர் முற்றுகையிடப்பட்டதை அறிந்து சார் ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அங்கு அவர் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சபாநாயகரை திடீரென பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.