100 நாள் வேலைத் திட்டத்தில் பல நாட்களாக சம்பளம் இல்லை… பெண்கள் போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் அருகே, நூறு நாள் வேலை திட்டத்தில், 80 முதல் 100 நாட்களாக சம்பளம் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி கிராமத்தில், சுமார் 250 பேர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த மே மாதம் முதல் லட்சுமி மில் ஓடை, முத்தாண்டிபுரம் ஊரணி மற்றும் அதன் சுற்றுப்புற கால்வாய்களை தூர்வாரினர். இவர்களுக்கான தினசரி ஊதியம் ரூ.200. ஆனால் 105 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பலருக்கு 80 முதல் 100 நாள் வரை ஊதியம் கொடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஊதியம் வழங்க கோரி, விருதுநகர் ஊராட்சி அலுவலகம் செல்லப் போவதாக அறிவித்தனர்.
தகவலறிந்த ரூரல் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் செந்தாமரை தலைமையிலான போலீசார் பெண்களை கிராமத்திலேயே தடுத்து நிறுத்தினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கூட்டமாகச் செல்லக் கூடாது என்றும் மீறினால் வழக்கு பதிந்து கைது செய்வேன் என்றும் இன்ஸ்பெக்டர் செந்தாமரை பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெண்கள் அனைவரும், கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்த விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன், மண்டல வளர்ச்சி அலுவலர் சபாபதி மற்றும் அதிகாரிகள், ஊதியம் வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்களிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.