கோவை அருகே சிகிச்சை பெற்று காடு திரும்பிய யானை பரிதாப பலி
காயம்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று உயிரிழந்தது.
கோவை: கோவை நரசிபுரத்தில் கடந்த 10 நாட்களாக உடல்நலமின்றி இருந்த காட்டு யானை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமமான நரசிபுரம் அருகே உடல் நலக்குறைவால் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு உடல் நலம் குன்றி கீழே விழுந்தது. உடனடியாக வன மருத்துவக்குழுவினர் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது
பின்னர் நேற்று காலை யானைக்கு உடல் சோர்வு சற்று நீங்கியதையடுத்து, காயத்திற்கும், உடலில் உள்ள புழுக்களை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேர சிகிச்சைக்கு பின் 50 வயதுக்கும் மேலான இந்த பெண் யானை, மாலையில் உடல் பலம் பெற்றபின் கிரேனில் இருந்த கயிறு அவிழ்க்கப்பட்டதை அடுத்து யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.
இதனையடுத்து வனத்துறையினர் மகிழ்ச்சியடைந்ததுடன், தொடர்ந்து யானையை வனக்குழு ஒன்று தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும், இரவு இந்த யானை அதன் கூட்டத்துடன் சேர்க்கும் வரை கண்காணிப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வனக்குழுவினர் இன்று காட்டுக்குள் சென்று பார்த்தபோது சிகிச்சை பெற்ற யானை உயிரிழந்து கிடந்தது. இதையடுத்து யானையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.