ஏற்காடு இடைத்தேர்தல்: வாகன சோதனையில் 10 கிலோ நகைகள் பறிமுதல்
சேலம்: சேலம் அருகே வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி ஏற்காட்டில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து எல்லா வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் அருகே உள்ள ஒரு வாகன சோதனைச் சாவடியில், பெங்களூரில் இருந்து காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 10 கிலோ தங்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறையினரிடம் பிடிபட்ட 10 கிலோ தங்க நகைகளை, ஏற்காடு தொகுதி தேர்தல் அதிகாரி சபாபதி மற்றும் சேலம் தாசில்தார் சுரேஷ் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரி சபாபதி கூறுகையில், ''ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்காக 13க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சேலம் அருகே உள்ள அரபிக்கல்லூரி சோதனைச்சாவடியில் பெங்களுரில் இருந்து வந்த காரை காவல்துறையினர் நள்ளிரவில் சோதனை செய்தனர். இதில் 10 கிலோ தங்க நகைகள் பிடிபட்டது. இதன் மதிப்பு 2 கோடியே 85 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.
போதிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்ததால் அந்த நகைகளை வருமானவரித் துறையிடம் ஒப்படைப்போம். அவர்கள் இந்த நகைகள் குறித்து விசாரணை நடத்துவார்கள். நகைகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி அந்த நகைகளை பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications