ஜெயலலிதா ஆட்சியில் ஒன்னே ஒன்னு மட்டும் செம வளர்ச்சி: கனிமொழி
திருவாரூர்: ஜெயலலிதாவின் ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திருவாரூர் மக்களிடையே பேசிய அவர் முதல்வர் ஜெயலலிதா எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றார்.
அவர் மேலும் பேசுகையில்,
மின்சாரம்
ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு புதிய தொழிற்சாலை கூட துவங்கப்படவில்லை. கடும் மின் பற்றாக்குறையாக இருக்கும்போது எப்படி புதிய தொழிற்சாலைகளை துவங்க முடியும். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்கிவிட்டதாக கூறும் ஜெயலலிதா ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கவில்லை.
சட்டம் ஒழுங்கு
ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சட்டம்-ஒழுங்கு துறையை கையில் வைத்திருக்கும் அவர் அதை தனது பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்.
டாஸ்மாக்
கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் எந்த துறையும் முன்னேறம் அடையவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில் மதுபான கடைகள் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதவர் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்கும் ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்புங்கள்.
கருணாநிதி
தமிழர்கள் சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து வாழ பாடுபட்ட தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். மண்ணின் மைந்தரை மக்கள் ஒருபோது கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.