ஆம், ஜெயலலிதா சொல்லாததையும் தான் செய்துள்ளார்: ஒப்புக் கொண்ட ஸ்டாலின்
திருவாரூர்: ஜெயலலிதா தான் சொல்லாததையும் செய்ததாகக் கூறி வருவது உண்மை தான் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,

பணப் பட்டுவாடா
அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையமும் சரி, காவல் துறையும் சரி கண்டுகொள்வதே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா அம்மையார் எதையுமே செய்யாமல் மக்களை பார்த்து செய்வீர்களா, செய்வீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செய்துவிட்டேன். நான் சொல்லாததையும் செய்துள்ளேன் என்று கூறி வருகிறார்.

சொல்லாததையும் செய்தார்
ஜெயலலிதா சொல்லாததையும் தான் செய்துள்ளார். ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதாக சொல்லாமலேயே செய்துள்ளார். சென்னை அருகே இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவேன் என்று சொல்லாமலேயே செய்தார்.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. தலைவர் கருணாநிதி 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார். அவர் முதல்வர் ஆன பிறகு பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.












Click it and Unblock the Notifications