ஆண் குழந்தைகளுக்கான ”பொன் மகன் சேமிப்பு திட்டம்”... முதிர்வு தேதிக்கு முன்பே பணத்தைப் பெறலாம்
சென்னை: பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள "பொன்மகன் சேமிப்பு திட்டம்" மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் "பொன்மகன் பொது வைப்பு நிதி" திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
தற்போது முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் எடுக்க விரும்பினால், குறைந்தபட்சம், பணம் செலுத்திய தொடக்க தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
8.7 சதவீதம் வட்டி:
இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கார்டியன் உதவியோடும், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவும் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.
வயது வரம்பு கிடையாது:
இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்த பட்சம் ரூபாய் 100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
15 ஆண்டுகள் வரை:
கணக்கு தொடங்கியதில் இருந்து 7 ஆவது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
முன்னாடியே பெற்றுக் கொள்ளலாம்:
இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.
உரிய காரணம் தேவை:
அதேசமயம், பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.