”ஒருதலைக் காதல்” - சட்டக் கல்லூரி மாணவியை கட்டையால் அடித்த இளைஞர் கைது
கோவை: கோவையில் ஒருதலை காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவியை தாக்கிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளி அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி காலனியில் வசித்து வருபவர் எம்.திலக்பிரபு. இவர் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், மருதமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் திலக்பிரபு வீட்டின் அருகே அறை எடுத்து தங்கியுள்ளார். திலக்பிரபு அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த புதன்கிழமையன்று அந்த மாணவி தான் குடியிருக்கும் வீட்டு அருகே நின்றுகொண்டு சட்டக்கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திலக்பிரபு அந்த மாணவியைக் கண்டித்ததுடன் உடனே வீட்டுக்கு செல்லும்படி எச்சரித்துள்ளார். மேலும், திலக் பிரபு அம்மாணவியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து திலக்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.