பாம்புடன் மனு கொடுக்க வந்து பயமுறுத்திய இளைஞன் – தேனி கலெக்டர் அலுவல குறைதீர்ப்பு நாள் கூத்து!
தேனி: தேனியில் மாவட்ட கலெக்டரிடம் பாம்புடன் மனு கொடுக்க வந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வாரு திங்கள் கிழமை அன்றும் நடைபெறும். அப்போது மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் வந்து தங்கள் குறை குறித்து மனு அளிப்பது வழக்கம்.
இந்த நிலையில், தேனி, பழனி செட்டிபட்டியை சேர்ந்த பெருமாள் என்பவர் மகன் கண்ணன் என்பவர் நேற்று கையில் ஒரு பையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்தபோது, தான் கொண்டு வந்த பையில் இருந்து சாரைப் பாம்பை எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டு மாவட்ட கலெக்டர் பழனிசாமியிடம் மனு அளிக்கச் சென்றார்.
இதைக் கண்ட பொது மக்கள் அலறி அடித்து அங்கும் இங்கும் ஓட்டம் எடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பாம்புடன் சென்ற நபரை பிடித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லாமல் தடுத்தனர்.
மேலும், பாம்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லக் கூடாது என்று அவரை எச்சரிக்கை செய்து அனுப்பினர். பின்பு அவர், தனது பாம்பை ஒரு பையில் வைத்து கட்டிவிட்டு, கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், " நான் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகின்றேன். அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பலமுறை பாம்புகளை பிடித்து அவற்றை யாரும் துன்புறுத்தாத இடத்தில் ஆற்றங்கரைகளில் ஆயிரக்கணக்கான பாம்புகளை வைத்து பாதுகாத்து வருகிறேன்.
தேனி மாவட்டம் வைகை அணையில் பாம்புகளுக்கு என்று தனியாக பாதுகாப்பகம் அமைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும் எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications