ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் கால் மட்டும் அடக்கம் - உடலை தேடும் போலீசார்!
ஈரோடு: ஈரோட்டில் ரயில் மோதி துண்டான இளைஞரின் கால் மட்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு நகருக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கும் இடையிலுள்ள காவேரி ஆற்றின் மீது செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் நவம்பர் 16 ஆம் நடந்து சென்ற இளைஞர் மீது அந்த வழியாக வந்த ரயில் மோதியது.
இதில் கால் துண்டான அந்த இளைஞர் காவிரி ஆற்றில் விழுந்துவிட்டார். துண்டான அவரது ஒரு கால் மட்டும் தண்டவாளம் அருகே இரத்தக் கறையுடன் கிடந்தது. இந்நிலையில், காவிரியாற்றில் விழுந்த இளைஞரை போலீசார் வழி நெடுகிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் அதிகமாக மழை பெய்ததால் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. காவிரி ஆற்றில் விழுந்த இளைஞர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து ஈரோடு இரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துண்டாகி விழுந்த காலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த காலை நேற்று ஈரோடு ரயில்வே போலீஸார் அடக்கம் செய்தனர். மேலும், கால் துண்டான இளைஞர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.