கோவை: லிப்ட் பழுது நீக்கச் சென்ற வாலிபர் “ரோப்” இடைவெளியில் சிக்கி பரிதாப பலி
கோவை: கோவையில் லிப்ட் பழுது நீக்கச் சென்ற வாலிபர் ரோப் இடைவெளியில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரிலுள்ள ரங்கே கவுடர் வீதியில் மகாவீர் மார்க்கெட்டிங் கம்பெனி என்ற நான்கு தளங்களுடன் கூடிய தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம், இந்த வணிக வளாகத்தின் லிப்ட் பழுதானது. ராமநாதபுரம் பகுதியில் உள்ள லிப்ட் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கோத்தகிரியை சேர்ந்த ஞானபிரபு மற்றும் ரூபான் ஆகிய இருவரும் நேற்று மாலை லிப்ட்டின் பின்புறம் உள்ள ரோப்பை சரிபார்த்து கொண்டிருந்தனர்.
இரண்டாவது தளத்தில் லிப்டின் செயல்பாடு குறித்து சோதனை செய்தபோது, எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் இருந்த ரோப் இடைவெளியில் ஞானபிரபு சிக்கிக்கொண்டார்.
வெளியே வரமுடியாமல் தவித்த அவரை கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று லிப்ட்டை உடைத்து, படுகாயத்துடன் வாலிபரை மீட்டனர்.
உடனடியாக 108 ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், ஒப்பணக்கார வீதி, இடையர் வீதி, ரங்கே கவுடர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications