டிட்வா புயல் மழை.. கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி! தூங்கிக்கொண்டிருந்தபோதே சோகம்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமத்தில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது தாய், தந்தை, சகோதரி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. டிட்வா புயலால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நேற்று இரவு கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துவேல், அவரது மனைவி கீதா, அவர்களின் மகள்கள் ரேணுகா மற்றும் கனிமொழி மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலத்த காயம் காரணமாக கீதா மற்றும் ரேணுகா தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா (20) உயிரிழந்தார்.
மழை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இளம்பெண் ரேணுகாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications