தஞ்சை: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 19 வயது வாலிபர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை தஞ்சாவூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள சாலியமங்கலத்தில் வசித்துவரும் 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 11ம் தேதி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் சிறுமியிடம் காசு கொடுத்து அருகிலிருந்த கடையில் சில பொருட்களை வாங்கச் சொல்லியுள்ளார்.
சிறுமியும் கடைக்கு சென்று வந்துள்ளார். பின்னர், சிறுமியிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்த வாலிபர் அவரை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிலுருந்த தனிமையைப் பயன்படுத்தி சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் வாலிபர்.
நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார் அவர். வாலிபரின் மிரட்டலுக்குப் பயந்த சிறுமியும் நடந்ததை யாரிடமும் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பயங்கர வயிற்று வலியால் துடித்துள்ளார் சிறுமி. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சிறுமி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்.
அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதைக் கண்டு பிடித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக , இது தொடர்பாக சிறுமியின் தாய் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். வழக்கைப் பதிவு செய்த போலீசார் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.