எப்படிடா கேட்கலாம் பத்து ரூபாய்... டாஸ்மாக் கடையையே இழுத்து முடிய "குடிமகன்".... கைது!
சேலம்: சேலத்தில் பீருக்கு 10 ரூபாய் குறைத்துக் கொடுத்து விட்டு, கடைக்காரர் கேட்ட எக்ஸ்ட்ரா காசைக் கொடுக்க மறுத்து ஒரு குடிகார இளைஞர், கடையில் பெரிய கலாட்டா செய்து கடையை இழுத்து மூடி விட்டார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவரைக் கைது செய்து கடையைத் திறந்து உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றினர்.
சேலம் களரம்பட்டி ஆட்டோ நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பீர் வாங்க வந்தார். கடையில் இருந்த ஊழியர்களிடம் ரூ.120 கொடுத்து ஸ்ட்ராங் பீர் பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர் பீர் பாட்டில் விலை ரூ.130 என்பதால் மேலும் ரூ.10 தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

உடனே கொந்தளித்த அந்த இளைஞர் ரமணா ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்து விட்டார். ரூ.120-க்கு விற்பனை செய்ய வேண்டிய பீர் பாட்டிலை ரூ.10 கூடுதலாக வசூலித்து விற்பனை செய்கிறீர்களா?. தினமும் எத்தனை பீர் விற்பனையாகும். அதன்மூலம் எவ்வளவு பணம் கிடைக்கிறது? கூடுதலாக பணம் எதுவும் தரமுடியாது. ரூ.120-க்கு பீர் தர முடியுமா? முடியாதா? என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. பத்து ரூபாய் கொடுத்தால்தான் பாட்டில் தருவோம் என்று கடைக்காரர்கள் கூறி விட்டனர். அவ்வளவுதான், கோபம் உச்சத்திற்குப் போன அந்த இளைஞர், கடையின் ஷட்டரை திடீரென இழுத்து மூடினார். பின்னர் கிளம்பிப் போய் விட்டார். இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் பறந்தது. விரைந்து வந்த போலீஸார் ஷட்டரைத் திறந்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.
கடை விற்பனையாளர் பின்னர் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பிரபுவைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications