ஜெ., சிகிச்சை பெறும் அப்பல்லோ அருகே இளைஞர் தூக்குப் போட முயற்சி - போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீட்ட போலீசார் அழைத்து சென்றனர்.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதியன்று இரவில் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஒருமாத காலத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை 11வது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
முதல்வரின் உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த சிலர், தற்கொலை செய்து கொண்டு தங்களது உயிரை மாய்த்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனை வாயில் முன்பு உள்ள மரத்தில் ஏறிய இளைஞர் ஒருவர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட அங்குள்ள காவலர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
தொடர்ந்து, அவரை காவல்நிலையம் கொண்டு சென்ற போலீசார், நடத்திய விசாரணையில், கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த அவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் எது நடந்தாலும் அதை தலைப்புச் செய்தியாக மாறிவிடுகின்றது. இதனால், தற்பொழுது இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் ஒரு சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இளைஞர் தவறி விழுந்ததால், காவல்துறையினர் அவரை மீட்டனர். மேலும், இளைஞரை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.