காதலித்து ஏமாற்றிவிட்டு 10 பவுன் நகையுடன் தப்பி ஓடிய வாலிபருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி: வீட்டிற்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்வதற்காக வந்த இளம்பெண்ணை ஏமாற்றிவிட்டு அவளுடைய பத்துபவுன் நகையுடன் மாயமான வாலிபரை தூத்துக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தை சேர்நதவர் ராமசாமி. இவரது மகள் சுபா. கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் நடந்த உறவினர்கள் வீட்டு திருமணத்திற்கு சுபா குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அங்கு ஒரு அழகான வாலிபர் சுபாவுடன் வலிய வந்து அறிமுகம் ஆகியுள்ளார்.
தனக்கு சொந்த ஊர் மதுரை என்றும், பெயர் ஸ்ரீராம் என்றும் கூறியுள்ளார். சுமாராக இருக்கும் நம்மிடம் அழகிய வாலிபர் வந்து பேசுகிறாரே என்று உருகிய சுபா தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
ஊர் திரும்பியதும் இருவரும் செல்போனில் பேசி பேசியே காதலை வளர்த்துள்ளனர். இநத நிலையில் இதுவரை பொறுத்தது போதும் திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று கூறி சுபாவை அவர் மதுரைக்கு அழைத்துள்ளார்.
உடனே சுபா தனது வீட்டிலிருந்த 10 பவுன் நகையை எடுத்து அணிந்து கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது காதலர் ஸ்ரீராம் தூத்துக்குடியில் தனது நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தூத்துக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் மிகவும் கருப்பாக இருப்பதால் பியூட்டி பார்லரில் சென்று அழகு படுத்தி கொள்ளலாம் என்று கூறி தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் பியூட்டி பார்லர் உள்ளே செல்லும் போது நகையுடன் செல்ல கூடாது என்று கூறி அதை கழற்றி தன்னிடமி கொடுக்குமாறு கூறியுள்ளார்.
சுபாவும் தான் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழற்றி அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றுள்ளார். இரண்டரை மணி நேரத்திற்கு பின் அவர் வெளியே வந்து பார்த்தபோது ஸ்ரீராம் மாயமாகியிருந்தார். அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் சுபா அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு தான் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான நகையுடன் அவர் தப்பி சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் வந்து சுபாவிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் ஸ்ரீராம் குறித்து எந்த வித உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் சுபாவுக்கு அறிவுரை கூறி ஊருக்கு அனுப்பி வைத்தனர். ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான நகையுடன் தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அறிமுகமில்லாத நபரை காதலித்து வீட்டை விட்டு ஓடிவந்து தன்னுடைய பத்துபவுன் நகையையும் பறிகொடுத்துவிட்டு செய்வதறியாது நிற்கிறார் சுபா.












Click it and Unblock the Notifications