திருப்பூரில் பணக்கார அத்தையை கடத்த முயன்ற மருமகன் கைது
திருப்பூர்: திருப்பூரில் வசதியாக வாழும் அத்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற மருமகன் கைது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி சாலையில் உள்ள தொட்டியபாளயைத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. அவரது மனைவி காந்திமதி(43). கடந்த வெள்ளிக்கிழமை காந்திமதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காரில் அங்கு வந்த மர்ம கும்பல் அவரை கடத்த முயன்றது. அந்நேரம் வெளியே சென்றிருந்த பழனிச்சாமி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
தனது வீட்டு வாசலில் இருந்து கார் கிளம்புவதை பார்த்து அதை நிறுத்த கையை காட்டியுள்ளார். அப்போது காருக்குள் இருந்து காந்திமதியின் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் காந்திமதியை கீழே தள்ளிவிட்டுச் சென்றனர். மேலும் காரில் இருந்து ஒரு செல்போனும் கீழே விழுந்தது.
பழனிச்சாமி இது குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்போன் மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த செல்போன் தாராபுரம், நாதம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் லிங்கசாமி(24) உடையது என்று தெரிய வந்தது.
வெள்ளக்கோவிலில் உள்ள செல்போன் ஏஜென்சியில் வேலை பார்க்கும் லிங்கசாமியும் அவருடன் வேலை பார்க்கும் தொட்டியபாளையம் கோயக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த ரூபாமணியின் கணவர் சசிக்குமாரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வசதியாக வாழும் தனது அத்தை காந்திமதியை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார் லிங்கசாமி. இதையடுத்து சசிக்குமாருடன் சேர்ந்து காந்திமதியை கடத்த முயன்றார்.
இந்நிலையில் போலீசார் லிங்கசாமி மற்றும் சசிக்குமாரை கண்டுபிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications