தலையை நசுக்கி இளைஞர் கொடூர கொலை... காதல் விவகாரமா?
சேலம் அருகே மலை உச்சியில் தலையை நசுக்கி இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரமே கொலைக்குக் காரணமாக கருதப்படுகிறது.
சேலம்: சேலம் மாவட்டத்தில், மலை உச்சியில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு நசுக்கி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை - உடையாப்பட்டி பைபாஸ் சாலையில் உள்ளது நாமாமலை. இந்த மலை உச்சியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள படிக்கட்டுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

நேற்றுக்காலை நடைப்பயிற்சி செய்த சிலர் படிக்கட்டுகளில் ரத்தம் உறைந்திருப்பதைக் கண்டு அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தை எட்டிப்பார்த்தனர். அப்போது தலைநசுங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் கொடூராக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது தலை நசுங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டனர். உடலின் அருகே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் வலது கை விரல்களில் ஒவ்வொரு எழுத்தாக அபி என்று எழுதப்பட்டுள்ளது. பெருவிரலில் சூர்யா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. மேலும் இளைஞரின் மார்பில் காதல் சின்னமான இதயத்தில் அம்பு பாய்வது போன்று பச்சை குத்தப்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா அல்லது முன்பகை காரணமா என விசாரித்து வரும் போலீசார் கொல்லப்பட்டவர் யார் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். மேலும் இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications